உலக செய்திகள்

குடிகார ஆசாமியுடன் தகராறு; அடித்து கொல்லப்பட்ட இங்கிலாந்து வாழ் சீக்கியர்

தாய்லாந்தில் குடிகார ஆசாமியால் இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் அமித்பால் சிங் பஜாஜ் (வயது 34). இவரது மனைவி பந்தனா கவுர் (வயது 34). விடுமுறையை முன்னிட்டு இந்த தம்பதி தங்களது 2 வயது மகனுடன் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள புக்கெட் நகரில் சென்டாரா கிராண்ட் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். இதே ஓட்டலில் நார்வே நாட்டை சேர்ந்த ரோஜர் புல்மேன் (வயது 53) என்பவரும் இருந்துள்ளார். இந்த நிலையில், புல்மேன் மற்றும் அமித்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியது. இதில், அமித் அடித்து கொல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் புல்மேன் குடிபோதையில் இருந்துள்ளார்.

இதுபற்றி அமித்தின் மனைவி கூறும்பொழுது, என்னையும், எனது மகனையும் காப்பாற்றுவதற்காக அவர் உயிர் தியாகம் செய்து உள்ளார். புல்மேன் நிர்வாண நிலையில், எங்களது அறைக்குள் நுழைந்து எனது கணவரை நோக்கி சத்தம் போட்டார்.

அந்த நபரை தடுத்து நிறுத்திய எனது கணவர், இங்கிருந்து மகனை அழைத்து கொண்டு செல்லும்படி என்னிடம் கூறினார் என்று தெரிவித்து உள்ளார். இதனிடையே, அந்த நபர் அமித் சிங்கை அடித்து, உதைத்து கொண்டு இருந்துள்ளார். இதனால் அமித் உயிரிழந்து உள்ளார்.