உலக செய்திகள்

நேபாளத்தில் பஸ் விபத்து; தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 7 பேர் பலி

விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் பெண்கள். 5 பேர் ஆண்கள் ஆவர். இதுதவிர 7 பேர் காயமடைந்தனர்.

காத்மண்டு

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், இந்தியாவை சேர்ந்த புனித யாத்ரீகர்கள் 14 பேர் உள்பட 16 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் மனகாமன கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, மலை பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ் சாஹித் லகான் என்ற கிராம பகுதியில் கந்தார் என்ற இடத்தில், 200 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 7 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். இவர்கள் தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்காக சென்றவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

அவர்களில் 2 பேர் பெண்கள். 5 பேர் ஆண்கள் ஆவர். இதுதவிர 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அன்புகைரேனி பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பஸ் ஓட்டுநர் காயம் எதுவுமின்றி தப்பி விட்டார். உதவியாளருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.

அந்த பஸ் தனஹுன் மாவட்டத்திலுள்ள அன்புகைரேனி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் இதே அன்புகைரேனி பகுதியில் இந்தியாவை சேர்ந்த புனித யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 27 பேர் பலியானார்கள்.

SCROLL FOR NEXT