வங்காளதேசத்தில் ராங்பூர்-டாக்கா நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில், 16 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
* ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக தன் கால்களையும், கைகளையும் இழந்து விட்ட இந்தியர் குர்பிந்தர் சிங்குக்கு அவர் பணியாற்றிய நிறுவனம் 54 ஆயிரத்து 994 டாலர் (சுமார் ரூ. 37 லட்சத்து 39 ஆயிரம்) இழப்பீடு வழங்கி உள்ளது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால்தான் இந்த இழப்பீடு கிடைத்து உள்ளது.
* இந்தியாவும், கியூபாவும் உயிரி தொழில் நுட்பம், மரபுசாரா எரிசக்தி, பாரம்பரிய மருந்துகள் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளன. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், கியூபா அதிபர் மிக்கேல் டயஸ் கேனலும் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.
* கம்போடியாவில் சீனப் பெண்களுக்காக வாடகைத்தாயாக அமர்த்தப்பட்டு, 33 பெண்கள் கருத்தரித்து இருந்தது, அங்கு நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.