கீவ்,
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் உக்ரைனில் உள்ள பொதுமக்களை குறிவைத்து இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். போலந்து நாட்டில் உள்ள வார்ஜா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார்.
மனித வாழ்க்கையின் மீது அலட்சியப்போக்கை கடைபிடிக்கும் புதினின் செயல் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று கூறிய அவர், புதின் இதே நிலையை தொடர்ந்து வந்தால், உலக நாடுகள் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.