உலக செய்திகள்

"தி காஷ்மீர் பைல்ஸ்" படத்துக்கு நியூசிலாந்து முன்னாள் துணை பிரதமர் ஆதரவா.?

முஸ்லீம்களின் புகார்களின் அடிப்படையில் திரைப்படத்தை மறுஆய்வு செய்ய தணிக்கை அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதை நியூசிலாந்து முன்னாள் துணை பிரதமர் கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஆக்லாந்து,

"தி காஷ்மீர் பைல்ஸ்" என்ற இந்தி திரைப்படம் மார்ச் 11ம் தேதியன்று வெளியாகியது. விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவான இந்த படம், காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, பாஜக ஆளும் அரியானா, குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, நியூசிலாந்து நாட்டில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை முஸ்லீம்களின் புகார்களின் அடிப்படையில் மறுஆய்வு செய்ய தலைமை தணிக்கை அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதை அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக எதிர்த்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் இந்த படம் வெளியாகவில்லை.அங்குள்ள சென்சார் அமைப்பு இந்த படத்தை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் காணலாம் என்று தணிக்கை செய்து அனுமதியை வழங்கியிருந்தது.

ஆனால், அதன்பின் படத்தின் உள்ளடக்கம் குறித்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்தனர். சில சமூக அமைப்புகள் கேட்டு கொண்டதற்கு இணங்க, தணிக்கை குழு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தை மறுதணிக்கை செய்வது நியூசிலாந்தின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல இடங்களில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட காட்டப்பட்டுள்ளது. இன்றுவரை படத்தை 110 கோடி மக்கள் பார்த்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்துக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு தொடர்பான உண்மை நிகழ்வுகளைப் பற்றிய படம் இது.32 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவது முஸ்லீம்கள் அல்ல என்று அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நியூசிலாந்து நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் சரியாக கண்டித்துள்ளனர்,

இஸ்லாம் மீதான பயத்தை போக்குவதற்கான இந்த நடவடிக்கையால், இஸ்லாம் பெயரை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பித்துக்கொள்ள இது வழிவகுக்கும்.

SCROLL FOR NEXT