உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அமைப்பது தொடர்பாக சீனா பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அமைப்பது தொடர்பாக சீனா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

காபூல்,

பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்துவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் சீன பிராந்தியத்திற்குள் ஊருவிவிடுவார்களோ என சீனா அச்சம் கொண்டு உள்ளது. எனவே எல்லையில் ராணுவ தளத்தை அமைப்பது தொடர்பாக ஆப்கானிஸ்தானிடம் சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

எல்லையின் சீன மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபடுவதாக தகவல்கள் கூறும் நிலையில் ஆப்கானிஸ்தானில் மலைப்பாங்கான பகுதியில் ராணுவ தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே சீனா மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கும் வாகான் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தஒரு ராணுவ நடவடிக்கையிலும் அப்பகுதியில் ஈடுபடவில்லை என இருநாட்டு ராணுவம் தரப்பிலும் மறுக்கப்படுகிறது. கிழக்கு துர்கிஷ்தான் இஸ்லாமிய அமைப்பின் உய்கூர் இயக்கத்தினர் வாகான் வழியாக சீனாவிற்குள் தாக்குதல் நடத்த ஊடுருவுகிறார்கள் என சீனா சந்தேகிக்கிறது. இதேபோன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஊடுருவலாம் என சீனாவிற்கு அச்சம் எழுந்து உள்ளது.

சீனாவின் மிகப்பெரிய மேற்குப்பிராந்தியமான சின்ஜியாங்கை பாதுக்காக்கபோவதாக சீனா அறிவித்தது. அந்த பிராந்தியத்தில் ஒருகோடி உய்கர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். சிரியாவிலிருந்தும் இராக்கிலுருந்தும் வரும் பிரச்சாரங்கள் மூலம் இந்த உய்குர் முஸ்லிம்கள் தீவிரவாதம் நோக்கி ஈர்க்கபடக்கூடுமென சீன அரசு அஞ்சுகிறது. அங்கு கடும் நடவடிகையிலும் சீனா இறங்கி உள்ளது. அங்கு கடந்த வருடம் போடப்பட்ட பலத்த பாதுகாப்பு உலக மீடியாக்களில் செய்தியாகியது. இப்போது பயங்கரவாத ஊடுருவலுக்கு வாகான் முக்கியமான பகுதியாக அமையும் என எண்ணி அங்கு ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சிக்கிறது.

இதே சீனா இந்தியா பயங்கரவாத ஊடுருவலுக்கு எதிராக போரிடும் போதும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா நடவடிக்கையை மேற்கொள்ளும் போது எல்லாம் சீனா அதனை தடுக்கிறது. தற்போது தன்னுடைய பிராந்தியத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கிளர்ச்சி ஏற்பட்டு விடும் என பெரிதும் அஞ்சுகிறது.