வாஷிங்டன்,
மாலத்தீவின் உள் விவகாரங்களில் சீனா தலையிடுகிறது எனவும் இந்தியா உட்பட இந்திய பெருங்கடலில் உள்ள ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் ஆபத்தாக இது அமையும் என்று மாலத்தீவு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான அகமது நஷீம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் அமர்வு உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு நெருக்கடி எற்படும் என கருதிய அதிபர் அப்துல்லா கயூம் யாமீன், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். முதலில் 15 நாட்களுக்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு பின்னர் மேலும், 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு பிரச்சினைக்கு சுமூக முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா உட்பட உலக நாடுகள் தெரிவித்தன. தங்கள் உள்நாட்டு பிரச்சினையில், இந்தியா தலையிடக்கூடாது என்று மாலத்தீவு அரசு உறுதிபட தெரிவித்தது.
இந்த நிலையில், மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதாக மாலத்தீவு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் எதிர்கட்சி தலைவருமான அகமது நஷீம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அகமது நஷீம் கூறியிருப்பதாவது:- ஆசியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று மேற்கு நாடுகளிடம் சீனா கூறுகிறது. ஆனால், மாலத்தீவு உள்விவகாரங்களில் மகிழ்ச்சியுடன் தலையிடுகிறது. மாலத்தீவில் மிகப்பெரிய அளவில் நில ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபடுகிறது. சீனாவின் தலையீடு இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.