பெய்ஜிங்,
பாகிஸ்தானில் கிளிப்டன் நகரில் ஜம்ஜமா பூங்கா அருகே நேற்று சென் ஜூ (வயது 46) என்ற சீனர் காரில் வைத்து சுடப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவருடன் பயணம் செய்த மற்றொரு சீனர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பி விட்டார்.
இந்த சம்பவத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் சீனர்கள் பாதுகாப்புடன் உள்ளனரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறும்பொழுது, சமீபத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம், தொடர்ச்சியாக தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்கும் தொடர்புடைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்நாடு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.