Image Source: ANI 
உலக செய்திகள்

ஜெருசலேம் புனித தலத்தில் யூதர்களை கல் வீசி தாக்கிய பாலஸ்தீனியர்கள்; பலர் படுகாயம்!

இஸ்ரேல் போலீசாருடன் நடைபெற்ற கொடூர கொலைவெறி தாக்குதலில், 152 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில், ஜெருசலேமின் பழைய நகரத்தில் அல்-அக்ஸா மசூதி வளாகம் உள்ளது. இந்த தலம் இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் ஆகிய இரு மதத்தினருக்கும் மிக முக்கியம் வாய்ந்த புனித தலமாக விளங்குகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இஸ்ரேல் போலீசாருடன் இங்கு நடைபெற்ற கொடூர கொலைவெறி தாக்குதலில், 152 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

கடந்த 4 வாரங்களாக, இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்கள் நடத்திய சில தாக்குதல்களால் பெரும் பிரச்சினை வெடிக்கும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் நுழைய முடியாதபடி பாலஸ்தீனியர்கள் கற்கள் மற்றும் பறைகளால் அவர்கள் செல்லும் பாதையை அடைத்து வைத்திருப்பதாக இஸ்ரேல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை அங்கு சென்ற போலீசார் ஏராளமான பாலஸ்தீனியர்களை மசூதியிலிருந்து வெளியேற்றினர். அதில் பல பாலஸ்தீனியர்கள் மசூதியின் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கிருந்து கொண்டு கடவுள் மிகச்சிறந்தவர் என்று கோஷமிட்டனர்.

மேலும், மசூதி வளாகத்தில், வெடி பொருட்களை பயன்படுத்தி பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர் என்று இஸ்ரேல் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மறுமுனையில், போலீசார் நடத்திய தாக்குதலில், 17 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அங்கு வழிபட வந்த யூதர்கள் பேருந்துகளை பாலஸ்தீனியர்கள் கற்களை வீசி தாக்கினர். அதனை போலீசார் தடுத்தனர். அதில் 14 வயது யூத சிறுவன் மற்றும் பேருந்து ஓட்டுனர் உட்பட 14 யூதர்கள் காயமடைந்தனர் என்று இஸ்ரேல் அவசர மருத்துவ சேவை மையம் தெரிவித்தது.

இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 2 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பாலஸ்தீனியர்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி, பதட்டத்தை அதிகப்படுத்தியதாக இஸ்ரேல் போலீசார் குற்றம் சாட்டினர்.