ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தொலைபேசி வாயிலாக பேசினார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையாடலில், ஷெரீப் பல முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்காக, சபாநாயகர் முகம்மது பகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதி குழுவை அனுப்பியதற்கு ஈரான் அதிபரிடம் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையே நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஈரான் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. மேலும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது