உலக செய்திகள்

பராகுவே நாட்டில் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்; 10 பேர் பலி

பராகுவே நாட்டில் சிறையில் கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் 10 பேர் பலியாகினர்.

அசுன்சியோன்,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவே நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சான் பெட்ரோ நகரில் சிறைச்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகளில் இருதரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்தது. கூர்மையான ஆயுதங்களை கொண்டு கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால், இது பெரும் கலவரமாக மாறியது.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த கலவரம் நீடித்தது. இதில் 5 கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர். இது தவிர மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து கலவர தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT