உலக செய்திகள்

லெபனானில் அடுத்தடுத்து அமைதி காப்பாளர்கள் மீது தாக்குதல்; ஐ.நா. அவசர கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு

லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த தாக்குதலில் அமைதி காப்பாளர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர்.

பெய்ரூட்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருந்து தாக்குதலை நடத்தி ஈரானுக்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், லெபனான் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் மற்றும் வலியுறுத்தும் வகையில், ஐ.நா.வின் அமைதி காப்பாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. அந்த குழுவை சேர்ந்தவர்கள் சிலர் வாகனத்தில் நேற்று சென்றபோது பனி ஹய்யன் என்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் இருந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. இதில், அந்த வாகனம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த அமைதி காப்பாளர்கள் 2 பேர் படுகாயம் அடைந்து பலியானார்கள். இதுதவிர ஒருவருக்கு பலத்த காயமும், மற்றொரு நபருக்கு காயமும் ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2-வது சம்பவம் இதுவாகும். இதற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைப்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், அமைதியை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது ஒருவரும் இறக்க கூடாது. துணிச்சலான பணியில் ஈடுபட்டு இருந்தபோது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் என அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐ.நா. அமைதி காப்பாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தோனேசிய நாட்டின் மேலும் 2 ஐ.நா. அமைதி காப்பாளர்கள் பலியாகி உள்ளனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். இவற்றை குறிப்பிட்ட பேரட், ஐ.நா. வீரர்களை பாதிக்க கூடிய இந்த சம்பவம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.