பியாங்யாங்,
அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது.
அந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.
இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவை மட்டுமல்லாது உலக நாடுகளையெல்லாம் அசைத்திருக்கிறது. வடகொரியா அணு ஆயுத நாடாகி உள்ளது, ஏவுகணைகளை ஏவுகிற வல்லமை படைத்த நாடாகி இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே வடகொரியா, நேற்று முன்தினம் பியாங்யாங் நகரில் மிக பிரமாண்டமான வெற்றி கொண்டாட்டம் நடத்தியது. அது குறித்த தகவல்களை அந்த நாடு நேற்று வெளியிட்டுள்ளது.