கொழும்பு
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார்.
சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை கண்டித்து கொழும்பு நகரின் பல இடங்களில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சித் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறிசேனாவின் உருவ பொம்மை ஊர்வலத்தில் சிலர் எடுத்து வந்து அதன் மீது கடுமையான தாக்குதலும் நடத்தினர்.
பிரதமர் மாளிகை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று முழக்கமிட்டனர். சிறிசேனா, பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது. இலங்கையில் இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.