டேவிட் சிலை
உலக புகழ்பெற்ற சிற்பக்கலைஞர் மைக்கேலேஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை ஆகும். ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லில் இருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு 18 மாதங்கள் தேவைப்பட்டன. இன்னும் இத்தாலி நாட்டின் அரிய பொக்கிஷங்களில் அந்த சிற்பம் முக்கிய இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த சிலையை அச்சில் வார்த்தது போன்று முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் அங்குள்ள உண்மையான டேவிட் சிலை 40 மணி நேரம் ஸ்கேன் செய்யப்பட்டு தற்போது 450 கிலோ எடை கொண்ட அந்த சிற்பத்தின் நகல் அச்சு அசலாக அக்ரெலிக் ரெசின் என்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையான சிலையில் காணப்படும் விரிசல் கூட தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்தாலியில் உருவாக்கப்பட்ட அந்த சிலையானது புளோரன்ஸ் நகரில் இருந்து துபாய்க்கு வெற்றிகரமாக 6 ஆயிரம் கி.மீ தொலைவு கடந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அந்த நாட்டின் அரங்கில் தற்போது அந்த சிற்பத்தின் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
இதன் அடிப்பகுதி மட்டும் 150 கிலோ எடையுள்ளதாக இருக்கும். மொத்தம் 14 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை மிகவும் பாதுகாப்பாக புளோரன்ஸ் பகுதியில் இருந்து அதனை உருவாக்கிய குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த சிற்பம் எக்ஸ்போ 2020 வளாகத்தில் இத்தாலி நாட்டு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பொருத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் பார்வையாளர்களுக்கு இந்த நகல் பளிங்கு சிற்பம் காட்சியளிக்க உள்ளது என அந்த இத்தாலி நாட்டு அரங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.