உலக செய்திகள்

பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதாக கியூபா ஊடகங்கள் தகவல்

மன அழுத்த பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டார். #FidelCastro

ஹவானா,

கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்டதாக கியூபா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிடலிடோ அல்லது லிட்டில் பிடல் என்றும் அறியப்படும் பலர்ட், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்த பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கியூபா அரசால் நடத்தப்படும் செய்தி இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

68 வயதான காஸ்ட்ரோ டியஸ் பலர்ட், மறைந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவிக்கு பிறந்த ஒரே மகன் ஆவார்.

மறைந்த டியஸ் பலர்ட், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கியூபா பிரநிதியாக கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோ

கியூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, கியூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோ கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி உயிரிழந்தார்.