Image Courtesy : PTI 
உலக செய்திகள்

டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிப்பு; 3 நாட்களாக இலங்கையில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்

இலங்கையில் சிக்கி இருப்பவர்களில் சுமார் 150 பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு,

'டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. 'டிட்வா' புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ வேக்த்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடக்கு - வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி செல்லக்கூடிய 16 விமானங்களும், சென்னைக்கு வரக்கூடிய 16 விமானங்களும், பெங்களூரு மற்றும் ஐதராபாத் செல்லக்கூடிய 22 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலும் டிட்வா புயல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதற்காக விமானத்தில் பயணம் செய்த சுமார் 300 இந்தியரகள், கடந்த 3 நாட்களாக கொழும்புவின் பன்தர்நாயகே விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

இலங்கையில் சிக்கி இருப்பவர்களில் சுமார் 150 பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், டிட்வா புயல் காரணமாக நாளை வரை தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.