மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ரஷிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரியான இகோர் கொனாஷெங்கோவ் இன்று கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் உக்ரைனின் 10 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷிய போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உதவியுடன் வீழ்த்தி உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மொத்தம் 69 விமானங்கள் தரை பகுதியிலும், 24 விமானங்கள் வான்வெளியிலும், 778 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 77 ஏவுகணை தாக்குதல் நடத்தும் சாதனங்கள், 279 தரையில் இருந்து தாக்குதல் நடத்தும் சிறிய ரக பீரங்கிகள், 553 சிறப்பு ராணுவ வாகனங்கள் மற்றும் 62 ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து உள்ளோம் என கூறியுள்ளார்.
உக்ரைனின் பிரியுத்னோய், ஜாவித்னே-பஜான்னே, ஸ்டாரொம்லைனோவ்கா, ஒக்தியாபிரஸ்கோய் மற்றும் நோவோமெய்ஸ்கோய் ஆகிய பகுதிகளை ரஷிய ஆயுத படைகள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னேறி உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.