பிரசல்ஸ்,
உக்ரைன் மீது அதிரடியாக போர் தொடுத்துள்ள ரஷியா, அந்த நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் உக்ரைன் முழுவதும் கடும் பீதி நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் அண்டை நாடுகளையும் தொற்றிக்கொண்டு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாடுகள் அவசர நிலையை அமல்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் ரஷியாவின் அண்டை நாடான லிதுவேனியா அதிபர் கிதானஸ் நவுசேடா நேற்று அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். ரஷியாவின் காலிங்கிராட் பிராந்தியத்தை தனது தென்மேற்கு எல்லையாக கொண்டுள்ள லிதுவேனியாவில் மார்ச் 10-ந்தேதி வரை இந்த அவசர நிலை அமலில் இருக்கும்.
இதன் மூலம் எல்லை பாதுகாப்பு அதிகரிப்பு, எல்லை முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்துதல், அரசு நிதியிருப்பை தாராளமாக செலவழித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழி ஏற்படும். இதைப்போல உக்ரைனின் அண்டை நாடுகளில் ஒன்றான மால்டோவாவிலும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.