கொழும்பு,
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலின் விலையும் அதிகரித்துள்ளதால், மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தின் முடிவில், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.