உலக செய்திகள்

ஈகுவடார் நாட்டில் மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி

ஈகுவடார் நாட்டில் மீன்பிடி துறைமுகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

குயிட்டோ,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது. அவர்கள் துறைமுகத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அங்கிருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறி துடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளியது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், இதன்காரணமாக அங்கு கடந்த மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்