டோங்கோ,
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை ஜனவரி 15-ம் தேதி திடீரென வெடித்து சிதறியது.
கடலுக்கு அடியில் இருந்த அந்த எரிமலை வெடித்ததால், கடலில் சுனாமி அலை உருவானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளால், எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் தற்போது வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
டோங்காவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே ஃபைபர்-ஆப்டிக் கேபிளை சுனாமி துண்டித்ததால், அங்கு மக்கள் இண்டர்நெட் வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இண்டர்நெட் வசதி இன்றி தவிக்கும் டோங்கோ தீவுக்கு மீண்டும் இண்டர்நெட் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியில் எலன் மஸ்க் இறங்கியுள்ளார். உலகின் பிரபல பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க், தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி டோங்காவில் இண்டர்நெட்டை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
டோங்காவின் அண்டை நாடான பிஜியின் உயர் அதிகாரி ஒருவர், மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் குழுவினர், பிஜியில் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்கள் மூலம் டோங்காவை மீண்டும் இணைக்க உதவும் நிலையத்தை நிறுவி வருவதாக ட்வீட் செய்துள்ளார். எலன் மஸ்க், டோங்கோ தீவுவாசிகளுக்கு மீண்டும் இண்டர்நெட்டை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.