மாஸ்கோ,
உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனைச் சுற்றியுள்ள நிலைமையைப் பற்றி விவாதிக்கும் போது, டான்பாஸ் குடிமக்களுக்கு எதிரான கிவ்வின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் அடிப்படை மதிப்பீடுகளை புதின் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியப் பிரதமர், விளாடிமிர் புதினுக்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, தற்போது உக்ரைனில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார்
2021 டிசம்பரில் புதுடெல்லியில் நடைபெற்ற ரஷ்ய-இந்திய உச்சிமாநாட்டின் பின்னணியில் இருதரப்பு ஒத்துழைப்பின் சில விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. பல்வேறு துறைகளின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதில் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.