வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாக்ஸ் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் பதிவு வெளியிட்டு இருந்தார். தொலைபேசி வாயிலாக அளித்த அந்த பேட்டியில், பள்ளிகளை திறக்கலாம். குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளது.
அவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் எனவும் பெற்றோர்களுக்கும் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் நோயை கொண்டு செல்ல மாட்டார்கள் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது. டிரம்பின் இந்த தகவல் முற்றிலும் தவறான கூற்று என்று மருத்துவ நிபுணர்கள் பலர் கூறினர்.
இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட அந்த பதிவை பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் அதிரடியாக நீக்கின. கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிடுவது தங்களது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறிய பேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் கூறியுள்ளன.