அங்காரா,
துருக்கி நாட்டில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் கஸ்டமோனு மற்றும் சினோப் ஆகிய இரு மாகாணங்களில் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இந்த மாகாணங்களை பேரிடர் மண்டலங்களாக அதிபர் டயீப் எர்டோகன் அறிவித்து உள்ளார். இந்த சூழலில், 95 சதவீத மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
கஸ்டமோனு மாகாணத்தில் 52 பேரும், சினோப் மாகாணத்தில் 9 பேரும் மற்றும் பார்தின் மாகாணத்தில் ஒருவரும் என மொத்தம் 62 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிபர் எர்டோகன், எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் மீட்பு பணிகளை மேற்கொள்வோம் என கூறியுள்ளார். பலரை இன்னும் காணவில்லை.
அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. பல்வேறு வீடுகள், பாலங்கள் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன. கார்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன.