இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த வாக்கெடுப்பை முன்னிட்டு இம்ரான் கான் நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதில், தனது ஆட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு அமெரிக்க வல்லரசே காரணம் என்று குற்றம் சுமத்தியவர், இந்தியாவைவும், இந்திய வெளியுறவு கொள்கைகளையும் புகழ்ந்து பேசினார். இம்ரான் கான் கூறுகையில், இந்தியாவுக்கு எந்த ஒரு வல்லரசு நாடும் பாடம் எடுக்க முடியாது. பொருளாதார தடைகள் விதித்திருந்த போதும் கூட ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது என்றார்.
இந்தியாவை சமீப நாட்களாக இம்ரான் கான் புகழ்ந்து பேசுவது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று இம்ரான் கானை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும் எதிர்க்கட்சி தலைவருமான மரியம் நவாஸ் கூறியதாவது
இம்ரானுக்கு இந்தியாவை பிடித்திருந்தால், பாகிஸ்தானினை விட்டு வெளியேறி அங்கு செல்ல வேண்டும். இம்ரான்கானை பிரதமராகவோ முன்னாள் பிரதமராகவோ நடத்தக்கூடாது. நான் நகைச்சுவைக்காக இதைக் கூறவில்லை. இம்ரான் கான் ஒரு மனநோயாளியாக நடத்தப்பட வேண்டும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முழு நாட்டையும் பிணைக் கைதியாக வைத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.