உலக செய்திகள்

“அத்தியாவசிய தேவையின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம்” - நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்

மக்கள் தேவையின்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி உள்ளது.

சிங்கப்பூர்,

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே தற்போது பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், மக்கள் தேவையின்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். இத்தகைய சூழலில் இலங்கைக்கு அத்தியாவசிய தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.