உலக செய்திகள்

கிரீஸ்: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 30 பேர் மாயம்

கிரீஸ் நாட்டில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஏதேன்ஸ்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் கிரீஸ் நாட்டிற்குள் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர். கிரீஸ் நாட்டின் ஃப்லிகிராண்ட்ரோஸ் தீவுக்கூட்டம் அருகே சண்டரோனி தீவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படலில் வந்த அகதிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிரீஸ் கடற்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், படகு விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அகதிகள் 12 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஆனாலும், இந்த விபத்தில் கடலில் மூழ்கி ஒரு அகதி உயிரிழந்தார். மேலும், 30 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த அகதிகள் பெரும்பாலானோர் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.