கவுதமலா சிட்டி,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவின் வட மத்திய பகுதியில் உள்ள அல்டா வெர்பாஸ் பிராந்தியத்தை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அப்போது மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீட்டில் மேற்கூரைகள் தூக்கி எறியப்பட்டன.
புயலைத் தொடர்ந்து அல்டா வெர்பாஸ் பிராந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பேய் மழை கொட்டியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை வெறும் 12 மணி நேரத்தில் கொட்டி தீர்த்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேய் மழையால் அங்குள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது. ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புயல் மற்றும் மழையை தொடர்ந்து அல்டா வெர்பாஸ் பிராந்தியத்தில் உள்ள சான் கிரிஸ்டோபல் வெர்பாஸ் நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்த கோர சம்பவத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.