உலக செய்திகள்

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Turkey #USembassy

அங்காரா,

துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் அமெரிக்க தூதரகத்தின் மீது காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. குண்டுகள் பாதுகாப்பு சோதனைச்சாவடியை தாக்கிய போதும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு சி.என்.என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடயே துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் குறித்து போலீசார் கூறுகையில், அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் வெள்ளை காரில் தப்பி சென்றனர். அவர்களை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் எனக் கூறினார்.

அமெரிக்க பாதிரியார் ஒருவரை துருக்கி நாடு சிறையில் வைத்துள்ளதால், அமெரிக்காவுக்கும், துருக்கியிக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. மேலும் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து வரும் இவ்வேளையில் அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.