ஹாங்காங்,
ஹாங்காங்கில், குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் யுன் லாங் மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் முகமூடி அணிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர். தாக்குதலில் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யுன் லாங் பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டனர். பேரணி நடத்த போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
ஆனாலும் தடையை மீறி போராட்டக்காரர்கள் யுன்லாங் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.