லண்டன்,
இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள தால்போட் என்ற துறைமுக நகரில் டாடா நிறுவனத்தின், இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று அதிகாலை 3.35 மணிக்கு குண்டு வெடித்தது போல பயங்கர சத்தத்துடன் விபத்து நேரிட்டது. இதனால் ஆலையில் பெரிய அளவில் தீ பிடித்தது.
இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
எனினும் இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை உறுதி செய்திருக்கும் டாடா நிறுவனம், விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியது.