கொழும்பு,
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து அந்நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில், உளவுத்துறை எச்சரிக்கை வடிவத்தில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேவாலய தாக்குதலுக்கு குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கம், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த உளவுத்துறை எச்சரிக்கையை டி.ஐ.ஜி. பிரியங்கா ஜெயக்கொடி, அதிபரின் பாதுகாப்பு பிரிவுக்கும், பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதிபர் மற்றும் பிரதமரின் கவனத்துக்கு இத்தகவலை எடுத்துச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மசூதிகளை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அந்த மசூதிகளின் தலைவர்களுக்கும் உளவுத்துறை எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகைக்காக கூடுவதை தவிர்க்குமாறு இலங்கை முஸ்லிம் மத விவகார மந்திரி அப்துல் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.