கின்ஷாசா,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவுத் ஊலே மாகாணத்தின் தலைநகர் இசிரோவில் தங்க சுரங்கம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசிரோவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தங்க சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது.
அப்போது சுரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.