மெல்போர்ன்,
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் உலக அளவில் உச்சமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்தியாவுடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவும் வருகிற மே 15ந்தேதி வரை தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால், இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு ஆஸ்திரேலிய மாநில முதல்வர் மார்க் மெக்கோவன் கூறும்பொழுது, நாடு திரும்பும் விமான பயணிகளுக்கு இந்தியாவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை நம்பிக்கைக்குரிய ஒன்றாக இல்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்த பரிசோதனை துல்லியமற்ற ஒன்றாகவோ அல்லது நம்ப முடியாத ஒன்றாகவோ உள்ளது என அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 4 பேர் பெர்த்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்தே கோவன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வரும் பலர் இதுபோன்ற கொரோனா பாதிப்புகளை கொண்டிருக்கின்றனர் என சுட்டி காட்டிய கோவன், இது, இந்தியாவின் பரிசோதனை நடைமுறை தோல்வி அடைந்து விட்டது என காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
விமானம் ஏறுவதற்கு முன் இந்தியாவில் பயணிகளுக்கு நடத்தப்படும் சோதனைகளில் துல்லியத்தன்மை இல்லாதது பற்றியும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதனுடன், அவசர தேவை இல்லாத சூழலில் ஆஸ்திரேலியர்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.