இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை 'காலிஸ்தான்' என்ற பெயரில் தனிநாடாக அறிவிக்க பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என அழைக்கப்படும் இவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களது பெயர்களுடன் கூடிய சுவரொட்டிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.