கிவ்,
உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
முதலில் இந்த பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப்படையும் களத்தில் குதித்தது. விமானப்படையின் சி-17 ரக விமானங்கள் மூலம் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர் ஒருவர் ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் மீண்டும் இந்தியா வர மறுத்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவில் தாக்குதலில் இருந்து தப்பிய இந்தியரான ககன், தனது குடும்பத்தையும் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் உக்ரைனில் விட்டுச் செல்ல முடியாது என கூறி வரமறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு இந்தியக் குடிமகன், என்னால் இந்தியாவுக்கு திரும்பி செல்ல முடியும், இந்தியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளதால், 8 மாத கர்ப்பிணியான எனது மனைவி உக்ரேனியர் என்பதால் அவரால் இந்தியா செல்ல முடியாது, மேலும் எனது குடும்பத்தை என்னால் இங்கு விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் போலந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். தற்போது லிவிவ் உள்ள ஒரு நண்பரின் இடத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.