ஹூஸ்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசித்து வந்தவர் சீனிவாஸ் நக்கீரேகான்டி (வயது 51). இவரது மனைவி சாந்தி நக்கீரேகான்டி (46). இந்திய வம்சாவளிகளான இவர்களது பூர்வீகம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகும்.
சீனிவாஸ், டெக்சாஸ் மாகாணத்தின் மின்வாரிய துறையில் இயக்குனராக பணியாற்றி வந்தார். அதே போல் சாந்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார். மேலும் இந்த தம்பதியர் பல்வேறு வகையில் தொண்டு நிறுவன பணிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்திய-அமெரிக்கா அறக்கட்டளை தலைவராக சீனிவாஸ் விளங்கினார்.
சீனிவாஸ்-சாந்தி தம்பதிக்கு 21 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் சுகர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சீனிவாசின் வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டு பீதியடைந்த அக்கம் பக்கத்தினர் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சுகர்லேண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வீட்டின் நுழைவாயில் அருகே, தலையில் குண்டுபாய்ந்த நிலையில் சாந்தி பிணமாக கிடந்தார்.
பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் சீனிவாஸ் இறந்துகிடந்தார். அவரது நெஞ்சில் குண்டு துளைத்திருந்தது. அவரது உடல் அருகே கைத்துப்பாக்கி கிடந்தது.
இந்த சம்பத்தின் போது சீனிவாசின் மகள் வீட்டில்தான் இருந்துள்ளார். ஆனால் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என அவர் போலீசாரிடம் கூறினார்.
மேலும், சம்பவம் நடந்தபோது சீனிவாசின் மகன் வீட்டில் இல்லை என்றும், அவர் தனது படிப்பு தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப பிரச்சினை காரணமாக சீனிவாஸ் தனது மனைவி சாந்தியை சுட்டுக்கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சீனிவாஸ் தங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியதாக அந்த தம்பதியின் நண்பர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இ-மெயிலில் உள்ள தகவலை வெளியிட வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டதால் அவர்கள் அது குறித்து விரிவாக தெரிவிக்கவில்லை.
அதேபோல் இது தற்கொலை என்பதை உறுதி செய்ய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை மற்றும் தற்கொலை என 2 கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.