அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதி சீனி மேத்யூஸ் மற்றும் கணவர் வெஸ்லி மேத்யூஸ். சீனி இந்திய அமெரிக்கராவார். இவர்கள் பீகாரில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளனர். அதற்கு ஷெரீன் மேத்யூஸ் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ந்தேதி சிறுமி ஷெரீன் மரணமடைந்து உள்ளார்.
ஆனால் சிறுமியை காணவில்லை என தம்பதி போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் வெஸ்லி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து சீனி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிறுமியை இரவில் தனியாக வீட்டில் விட்டு விட்டு தம்பதி ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். சிறுமி ஷெரீன் சமையலறையில் தனியாக இருந்துள்ளார். ஒன்றரை மணிநேரத்திற்கு பின் தம்பதி திரும்பி வந்துள்ளனர். அப்பொழுது சிறுமி உயிருடன் இருந்தாரா? என்பது போலீசார் விசாரணையில் முடிவாகவில்லை. ஆபத்து நிறைந்த சூழலில் குழந்தையை விட்டு சென்ற குற்றத்திற்காக சீனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
டல்லாஸ் நகரில் சிறுமியின் உடல் வாய்க்கால் பாலம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. டல்லாஸ் மருத்துவ ஆய்வு குழு சிறுமியின் மரணத்திற்கான காரணம் பற்றிய பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவருவதற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். இந்த குற்றத்திற்கு 99 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
ஷெரீனின் மரணத்தினை தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகத்தின் அனுமதி சான்றிதழ் வழங்கிய பின்பே தத்து குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விவரங்களை தொடர்ந்து அளிக்கும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தினை மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.