உலக செய்திகள்

கடத்தல் கும்பலை காரில் விரட்டி சென்று துப்பாக்கி சூடு; இந்திய வம்சாவளி சிறுமி பலி

தென்னாப்பிரிக்காவில் கடத்தல் கும்பலுக்கும், காரில் விரட்டி சென்றவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வம்சாவளி சிறுமி பலியானாள்.

ஜோகன்னெஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவில் சாட்ஸ்ஒர்த் பகுதியை சேர்ந்த சிறுமி சாடியா சுக்ராஜ் (வயது 9). இந்திய வம்சாவளி சிறுமியான சாடியா தனது தந்தையுடன் பள்ளி கூடத்திற்கு காரில் சென்றுள்ளார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியது. அதன்பின் சிறுமியின் தந்தையை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு காருடன் கும்பல் தப்பி சென்றுள்ளது.

தொடர்ந்து காரை பொதுமக்கள் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்துள்ளது. பூங்கா ஒன்றின் அருகே கடத்தல் கும்பல் காரை மோதியுள்ளது.

அதில் காயத்துடன் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடத்தல்காரரில் ஒருவன் தப்பி விட்டான். மற்றொருவன் பலியாகி கிடந்து உள்ளான். ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாள். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் உடனடி நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சமூக வலை தளத்தில் பலர் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT