நியூயார்க்,
ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 7-நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இதில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டு பேசினார். இதன் பின்னர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹூஸ்டனில் இருந்து நியூயார்க் சென்றார்.
74-வது ஐ.நா. சபை கூட்டத்தின் பருவ நிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்பின்னர் ஜெர்மனி, நெதர்லாந்து, கதார், பூடான், இத்தாலி, மாலத்தீவு, உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அதிபர் டிரம்புக்கு நன்றி. அவர் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினார்கள்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து பேசிய அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்கும். அமெரிக்காவின் கொள்கையின் மீது மோடிக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கும் மோடிக்கும் இடையேயான கெமிஸ்டிரி ஒத்து போகிறது. பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரான் கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என நம்புகிறேன். ஒரு தந்தையைப் போல் இந்தியாவை மோடி ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார். ஒருவேளை அவர்தான் இந்தியாவின் தந்தையாக இருக்கலாம் என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ அல்கொய்தாவுக்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று அதிபர் டிரம்பிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், அதை மோடி கவனித்துக்கொள்வார் என்று கூறினார்.