ஜகார்த்தா,
இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் வடமேற்கு முனையில் (சிங்கப்பூர் அருகே) படாமில் உள்ள கடற்படை தளத்துக்கு அருகே சுமார் 22 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு எண்ணெய் கப்பல் வந்து கொண்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த கடற்படையினர் அந்த கப்பலை அதிரடியாக கைப்பற்றினர்.
இந்த கப்பல் பனாமா நாட்டின் கொடியேந்தியதாகும். இதன் பெயர், எம்.டி. ஜோடியாக் ஸ்டார். இதில் இந்தோனேசிய சிப்பந்திகள் 18 பேர் இருந்தனர். ஒரு மலேசிய சிப்பந்தியும் இருந்தார். இந்த எண்ணெய் கப்பல் 4,600 டன் கழிவு எண்ணெய்யுடன், துறைமுக அனுமதியோ, பிற முறையான சட்ட ஆவணங்களோ இன்றி சட்டவிரோதமாக வந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எண்ணெய் கப்பல் கேப்டனிடம் விசாரணை நடத்துவதாகவும் இந்தோனேசிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அர்ஸ்யாத் அப்துல்லா தெரிவித்தார்.