ஜகர்த்தா,
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை அமைந்துள்ளது. 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து கடந்த 4ந்தேதி லேசாக புகை கிளம்பியது. இதன்பின்பு எரிமலை வெடித்து, சாம்பல் புகை வான்வரை சென்று காற்றில் கலந்தது.
இந்த எரிமலை வெடிப்பிற்கு அருகேயிருந்த வீடுகள் சேதமடைந்தன. பாலம் ஒன்றும் சேதமடைந்து உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், 41 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது என உள்ளூர் ஊடகங்களின் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் எரிமலை வெடிப்புக்கு உயிரிழப்பு 34 ஆக உயர்வடைந்தது. 169 பேர் காயமடைந்து இருந்தனர். 17 பேரை காணவில்லை. 3,700 பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன.
இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ சென்று பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களுக்கு அவர் உறுதி வழங்கினார்.
எனினும், காயமடைந்தவர்களில் பலர் உயிரிழந்து வருவதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்புக்கு பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்து உள்ளது என தேசிய பேரிடர் மேலாண் கழகம் இன்று தெரிவித்து உள்ளது. மொத்தம் 104 பேர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான கால்நடைகளும் கொல்லப்பட்டு உள்ளன. பாலங்கள் பல இடிந்துள்ளன.