உலக செய்திகள்

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பலுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு

இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டன.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது.

இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகொள் விடுத்தார். அதன்படி, ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும் இது ஒரு போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு இந்திய மதிப்பில் ரூ.18.5 கோடி($2 million) கட்டணட் வசூலிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. போர் இழப்பீட்டை ஈடு செய்ய வசூலிக்கப்படும் இந்த கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்வோம் என ஈரான் தெரிவித்துள்ளது. கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஈரானி போர் நிறுத்த நிபந்தனைகளில் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.