டெஹ்ரான்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது. எனினும், ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியது. யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறி உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிவிபத்தை குறிப்பிட்டு பேசிய அவர், நீங்கள் (இஸ்ரேல்) செய்தது அணுசக்தி பயங்கரவாதம், நாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது என்றார். அணு ஆயுதங்ளை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்பதால் அந்த இலக்கை நோக்கி ஈரான் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை ஈரான் மறுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் செறிவூட்டலை 3.67 சதவீதமாக வைத்திருப்பதாக உறுதியளித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் செறிவூட்டலை 20 சதவிகிதம் வரை அதிகரித்தது. மருத்துவ நோக்கங்களுக்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்று ஈரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.