வாஷிங்டன்,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரானின் தலைநகர் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளின் மீது தீவிர வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர தலைமைத் தளபதி முகமது பாக்பூர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்க தாக்குதலில் ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிக்கர காவல்படையின் பிரதான தலைமையகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க சென்ட்காம் (U.S. Central Command - CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், “ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொன்றது. நேற்று, அமெரிக்க ராணுவம் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில் பாம்பின் தலை நசுக்கப்பட்டு உள்ளது. ஈரானின் 47 ஆண்டு கால பாதுகாப்பு கோட்டை தரைமட்டமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்ததால், போர் ஒரு மாதத்திற்கு நீடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.