உலக செய்திகள்

ஈரான் படைகள் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டன: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக தீவிரமாக ஈரான் போர் புரிந்தது.

வாஷிங்டன்,

அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கு தல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் நட்புக் கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர்ப் பதற்றம் காரணமாக ஈரானில் 1,600 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

வளைகுடா பிராந்தியம் முழுவதும் 2 வாரத்துக்கும் மேலாக பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி இருக்கும் ஈரான் போர், தற்போதைக்கு ஓய்வதற்கான அறிகுறி எதையும் வெளியிடவில்லை. மாறாக நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையையே காட்டுகிறது.

தன்னை தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக தீவிரமாக ஈரான் போர் புரிந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்க படைத்தளங்களை நாள்தோறும் தாக்கி வரும் ஈரான், தனது அண்டை நாடுகளையும் விடாமல் தாக்கி வருகிறது. இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஈரான் மீது கடுமையாக தாக்குதல்களை அமெரிக்கா தொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் தலைமை முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்க படைகளின் தாக்குதலால் ஈரான் படைகள் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டன. ஈரானின் கடற்படையும், விமானப்படையும் முற்றிலும் அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டமைக்க முடியாத அளவுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம். ஈரான் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹார்முஸ் நீரிணையை பகுதிகளில் கன்னி வெடிகளை வைத்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஈரானின் கெட்ட எண்ணத்தை நாங்கள் முறியடித்துள்ளோம். இந்த பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட இருந்த 30-க்கும் அதிகமான ஈரானின் கப்பல்களை அமெரிக்காவின் கப்பல்களும், ஏவுகணைகளும் தகர்த்துவிட்டது. பல நாடுகளின் பொருளாதாரம் ஹார்முஸ் நீரிணையை நம்பி உள்ளது. ஹார்மூஸ் நீரிணையை காக்க ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா உதவ வேண்டும். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான மாற்று வழிகளை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.