தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய புரட்சி காவல் படையின் உளவு பிரிவுக்கான தலைவராக செயல்பட்ட மஜித் கோதம்-காசினி கதேமி என்பவரை தெஹ்ரானில் வைத்து நேற்றிரவு இஸ்ரேல் விமான படையினர் தாக்கி படுகொலை செய்துள்ளனர். ராணுவ உளவு பிரிவு தகவலின் அடிப்படையிலேயே, இந்த தாக்குதல் நடந்துள்ளது என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
கதேமி, பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் உயர் பதவியை வகித்த அனுபவம் வாய்ந்தவர். அவர் சேகரித்த உளவு தகவல்களை கொண்டு, பயங்கரவாத செயல்களை நவீனப்படுத்தியும், அமல்படுத்தியும் வந்திருக்கிறார். உலகம் முழுவதும், இஸ்ரேல் மற்றும் யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை கதேமி ஊக்குவித்து வந்துள்ளார் என்று இஸ்ரேல் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
அமெரிக்காவின் இலக்குகளை தாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஈரானில் உள்நாட்டு கலகம் ஏற்பட்டபோது, அதனை ஒடுக்கும் வகையில், ஈரானிய மக்களை கண்காணிக்கும் பணியை கூட அவர் மேற்கொண்டார் என்று இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது.