டமாஸ்கஸ்,
மேற்கு ஆசிய நாடான ஈராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). இவர், 2014-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம், அடுத்தடுத்து உலகத்தின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. இதனால், அல் பாக்தாதி மிகக்குறுகிய காலத்திலேயே பிரபலமாகி விட்டார்.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த அபு பக்கல் அல் பாக்தாதி, கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க சிறப்பு படையினருடனான சண்டையின் போது, ஏற்பட்ட தோல்வியால் பாக்தாதி கோழை போல் தற்கொலை செய்து கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அல் பாக்தாதி பலியானதை ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உறுதி படுத்தியுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்டுள்ள ஒலிநாடாவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். ஐ.எஸ் இயக்கத்துக்குப் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரை கொன்றதற்காக மகிழ்ச்சி அடைய தேவையில்லை என்று அமெரிக்காவை எச்சரித்துள்ள அந்த இயக்கம், தாக்குதல்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.