துபாய்,
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மக்மூத் அகமதிநெஜாத் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதால், வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டனின் கடற்படை தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல், ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வரும் லெபனான் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 31 பேர் பலியாகியுள்ளனர். 140- பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.